Svr.pamini

Saturday, August 18, 2012

மண்ணில் ஒரு சொர்க்கம் கோடியக்கரை.

இன்று கலையிழந்து கற்பிழந்து  கிராமத்திற்கான அனைத்து அடையாளங்களையும் தின்று விட்ட நாகரீக மோகத்தினிடையே, பழமை மாறாமல், பல வரலாற்று சுவடுகளை தாங்கிய படி  கவர்ச்சியாய் வருவோரை வசீகரிக்கும் ஒரு அழகிய கிராமம். நான் பிறந்து வளர்ந்து,உப்பு காற்றில் உழன்று, புழுதி மழையில் நனைந்த அழகிய கிராமம் கோடியக்கரை.

ஆயிரம் ஆயிரம் சிறப்புக்கள்..அனைவரும் காணவேண்டிய கண்கொள்ளா அழகு.

இந்த கிராமம் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ளது. இந்திய வரைபடத்தில் பார்த்தோம் எனில் இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் கடல் பாக்ஜலசந்தி இந்த கிராமத்தில் தான் உள்ளது.இங்கிருந்து இலங்கை வெறும் இருபத்தைந்து கிலோ மீட்டர் தான்.

எப்பொழுதும் குளிந்த காற்று வீசக்கூடிய இந்த அழகிய கடற்க்கரை கிராமத்தின் தனி சிறப்பே. அங்குள்ள சதுப்பு நில காடுகள் தான்.

இங்கு ஆயிரக்கணக்கான புள்ளி மான்களும் வெளிமாங்களும் கூட்டங் கூட்டமாய் துள்ளி திரிவரை காணலாம்.
மயில்கள் அசைந்து அன்னநடை போடும் அழகை காணலாம். காலை மற்றும் மாலை நேரத்தில் குயில்களின் இனிய கானம் கேட்க்கலாம்.

இங்கு 17.26 சதுர கி.மீ பரப்பளவில்  1967ஆம் ஆண்டு கலைமான்களைக் காப்பதற்காக உருவாக்கிய வனஉயிரின உய்விடம் இங்குள்ளது.
இந்த காட்டில் பன்றிகள், நரிகள்,சில அரியவகை ஆமைகள். கோடிய விஷமுள்ள பாம்புகள்,முயல்கள்
தான் தோன்றி குதிரைகள்

(ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டு பின்னர் விட்டுவிட பட்ட குதிரைகள் நாளடைவில் அடங்காமல் சுற்றி திரியும் தான் தோன்றி குதிரையாக மாறிவிட்டன)

இங்குள்ள காட்டில் 150 வகையான தாவரங்கள் உள்ளன பல அறிய வகை மூலிகைகளும் இங்குள்ளது  குறிப்பிடத்தக்கது.இங்குள்ள மூலிகைகளை பாதுகாக்க  வனத்துறை மூலிகை வனம் அமைத்து அதை பாதுகாத்து வருகின்றனர்.

அடுத்து இங்குள்ள பறவைகள் சரணாலயம்.





அக்டோபர் தொடங்கி மார்ச் மாதம் வரை ஆயிர கணக்கான வெளிநாட்டு பறவைகளை இங்கு காணலாம்.ஆண்டொன்றுக்கு இரண்டரைலட்சம் பூ நாரைகள் இங்கு தரை இறங்கும்.இந்த பறவைகள் பற்றி தனியாக ஒரு பதிவிடுகிறேன்.

இந்த கிராமம் தாங்கி நிற்கும் வரலாற்று சின்னங்கள் .

 .
2.004 சுனாமி அழித்தது போக எஞ்சி நிக்கும்  1000 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்துக் கலங்கரை விளக்கம் ஒன்று சிதைந்த நிலையிற்பதை இன்றும் காணலாம்

ராமர் பாதம்


இங்கு உயர்ந்த மணல் மேடு ஒன்றில்  ராமருடைய திருப்பாதம் பதிக்க பட்ட ஆலயம் ஓன்று உள்ளது.( நான் ஏற்க்கனவே சொல்லியிருந்தேன் இங்கிருந்து இலங்கை வெறும் இருபத்தைந்து கிலோ மீட்டர்தான் என்று)சீதையை ராவணன் கடத்தி சென்ற பொழுது ராமர் இங்கிருந்து இலங்கையை பார்த்தாராம்,ராவண கோட்டையின் பின் புறம தெரிந்ததாம்.பின் புறம் செல்வது கோழை தனம் என்றெண்ணி  ராமேஸ்வரம் வழியாக சென்றதாக வரலாறு.


அடுத்து சிறப்பு மிக்க ஆலயம் ஓன்று ...



தேவர்களும் அசுரர்களும் பாற்க்கடலை கடைந்து கிடைத்த அமிர்தத்தை பருகிய பிறகு மீதமுள்ள பகுதியை வாயுதேவனிடம் கொடுத்தனர். அவர் அதை எடுத்துக் கொண்டு ஆகாய வழியாக செல்கையில் அசுரர்கள் வாயுவிடமிருந்து அமுத கலசத்தை கைப்பற்ற முனைந்தனர். வாயுதேவன் முருகனை மனதால் வணங்கி அமுத கலசத்தைக் கீழே போட, அதை முருகப்பெருமான் தன் கையில் ஏந்திக் கொண்டார். அமுத கலசத்தில் இருந்து ஒரு துளி அமிர்தம் தவறி பூமியில் கோடியக்கரை தலம் இருக்கும் இடத்தில் விழுந்து ஒரு லிங்கமாக மாறியது. அதனாலேயே இங்குள்ள மூலவருக்கு அமிர்தகடேசுவரர் என்று பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் உள்ள பிரகாரத்தில் இருக்கும் கிணறு அமிர்த தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. வங்கக் கடலோரம் அமைந்துள்ள இத்தலம் ஒரு கோளிலித் தலமாகும். ஆகையால் இங்குள்ள நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன.


இந்த ஆலயத்தை பற்றி மேலும் தகவல் அறிய இங்கே சொடுக்குங்கள்


 

பொன்னியின் செல்வன்  நூலில் கல்கி அவர்கள் எங்கள் கிராமத்தை சுவைபட விவரித்து இருக்கிறார்.அதை படிக்க இங்கே இங்கே சொடுக்குங்கள் .


 

இப்படி எங்கள் கிராமம் அனைவரும் காண வேண்டிய அழகிய சொர்க்கம். வாய்ப்பு கிடைப்போர் அவசியம் ஒருமுறை வந்து செல்லுங்கள் நாகப்பட்டினத்தில் இருந்து 57 கிலோ மீட்டர்தூரம். வரும் வழி எங்கும் வேளாங்கண்ணி, வேதாரண்யம் என்று அனேக சுற்றுலா தளங்கள் உள்ளன..



 

No comments:

Post a Comment